நடிகர் கமலஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் பதிவுகளை படித்து புரிந்துகொள்ள கோனார் தமிழ் உரைதான் வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் அண்மைக்காலமாக அரசியலில் இறங்கவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த 5 ஆம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து 7 ஆம் தேதி தனது பிறந்த நாளின்போது அரசியல் தொடர்பான செயலி ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்.
அந்த பதிவுகள் அரசியல் கட்சிகளிடையே பெரும்பாலும் சர்ச்சையைத் தான் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் கமலின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு, உணவகங்களில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதா என்பத தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமலஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் பதிவுகளை படித்து புரிந்துகொள்ள கோனார் தமிழ் உரைதான் வேண்டும் என்று கூறினார்.