தீவிரவாதிகளின் பிடியில் தமிழ்நாடு.. ஆளுநர் மாளிகையில் அலறிய பாஜக மாநில து.த கே.பி ராமலிங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2022, 2:46 PM IST
Highlights

தமிழ்நாடு தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் அது குறித்து ஆதாரபூர்வமாக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதாகவும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் அது குறித்து ஆதாரபூர்வமாக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதாகவும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நிச்சயம் தங்கள் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருவதுடன், அரசுக்கு எதிராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அடிக்கடி ஆளுநரை சந்தித்து பாஜக மாநில தலைவர்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநரை சந்தித்தார். ஆளுநருடன் சுமார் 70 நிமிடம்வரை அவர்கள் சந்திப்பு நடந்தது. அவருடன் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம், வி.பி துரைசாமி, மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படியுங்கள்: ஏய்யா.. ஆரத்தி எடுக்கும் போது முட்டிகிட்டு நிக்கிறீங்களே... தருமபுரி செந்திலை டரியல் ஆக்கிய அன்புமணி

இச்சந்திப்புக்குப் பின்னர் ஆளுநர் மாளிகையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தொடர்ந்து அசாதாரண நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது, தமிழகத்தில் நடக்கும் தேச விரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறோம், தேச விரோத செயல்களால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. தீவிரவாதிகளுக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு காவல்துறை முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:  மீடூ விவகாரம்... லீனா மணிமேகலை தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரம்! நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

விமானப்படை தளபதி வீட்டு முகவரி பெயரிலேயே போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 72 பாஸ்போர்ட்டுகள் போலியாக வழங்கப்பட்டுள்ளது, இது போல மொத்தம் 200 பாஸ்போர்ட்டுகள் போலியாக கொடுக்கப்பட்டுள்ளது. போலி பாஸ்போர்ட் விவகாரத்திற்கு உளவுத்துறை அதிகாரி டேவிட்சன்  ஆசீர்வாதம் மூலக்காரணமாக இருந்துள்ளார். அவரைப்போன்ற தவறான அதிகாரிகள் உளவுத்துறையில் இருப்பதால்தான் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. போலி பாஸ்போர்ட் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான ஆதாரங்களையும் ஆளுநரிடத்தில் வழங்கி இருக்கிறோம், நிச்சயம் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் தீவிரவாதியின் பிடியில் சிக்கி இருக்கிறது, உடனே அதை மீட்க வேண்டும், தற்போது நடந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் என்பது துறை ரீதியிலான மாற்றம் மட்டுமே, ஆனால் தவறு செய்த அதிகாரிகளை இந்த அரசுக்கு பாதுகாத்து வருகிறது. மொத்தத்தில்  ஒழுக்கமற்ற, தவறான அதிகாரிகளை தலைமையிடத்தில் வைத்திருப்பதுதான் மொத்த பிரச்சினைக்கும் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

click me!