
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- நடமாடும் வாகனங்கள் உதவியுடன் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. 7.5 லட்சம் காய்ச்சல் முகாம்கள். 1.58 கோடி பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை போல் மாநிலங்களும் ஆர்டிபிசிஆர் சோதனையை நடத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சென்னையை பொறுத்தவரை, ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு தமிழகத்தில் 4,629 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற மாநிலங்கள் கொரோனா பரிசோதனையை குறைத்தாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை. தமிழகத்தில் 1.86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டுள்ளார்.