
எனது உருவத்தைக் கேலி செய்பவர்கள் இதேமாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வீர்களா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் உள்ளூரில் இருந்தும்கூட அவர்களுக்கு ஏதும் தெரிவிக்காமல் ஆலோசனை நடத்தியதாக பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் வைத்திருந்தனர். ஆளுநரின் ஆய்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, கோவையில் ஆளுநர் பன்வாரிலால் நடத்திய ஆய்வு குறித்தும், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறையின் சோதனை உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அதேபோல், சமூக வலைதளங்களில் தங்கள் மீதான விமர்சனம் குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் ஒரு பெண். தேசிய கட்சியின் தலைவர். இன்னும் இப்படி நிறைய நேர்மறை விஷயங்கள் உள்ளன.
நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன். ஆனாலும் என் மீது தாக்குதல்கள் முன் வைக்கப்படுகின்றன. ஏனென்றால் பாஜக தலைவர் ஒருவர் வலிமையானவராக இருப்பதை இங்கு யாரும் விரும்பவில்லை. அதனாலேயே எனது உயரம், தோற்றம், வயது, கூந்தல் என விமர்சனம் செய்கின்றனர். அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
எனது விக்கிப்பீடியா பக்கத்துக்குச் சென்று தமிழிசை என்பதை டுமிலிசை என மாற்றியமைத்துள்ளனர். இப்போது கூட கண்ட நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருகிறது. இதையெல்லாம் ஓர் ஆண் அரசியல்வாதிக்கு செய்வீர்களா என்பது மட்டுமே எனது கேள்வி என்று தமிழிசை காட்டமாக பதிலளித்துள்ளார்.