
முதலமைச்சராக பதவியேற்க சசிகலாவுக்கு தடையா? உச்சநீதிமன்றம் இன்று முடிவு…!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களும், குழப்பங்களும் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே டிசம்பர் மாதம் சசிகலா அதிமுக வின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ க்கள் சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இதனையடுத்து ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான பல்வேறு நடைமுறைகள் தொடங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக நுற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிடும் வரை சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக் கூடாது எனவும், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்கக் கோரியும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு இன்று பிற்பகலில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் முக்கிய தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.