சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் திடீர் மறைவு... கோவை அதிமுகவில் சோகம்..!

By Asianet TamilFirst Published Mar 21, 2019, 8:49 AM IST
Highlights

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனராஜ் திடீரென மாரடைப்பால் காலமானார். 
 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கனகராஜ். அடிக்கடி பரப்பரப்பான கருத்துகளைத் தெரிவிக்கூடியவர்.  நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார். தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் நேற்று இரவுகூட நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் எழுந்து தேநீர் அருந்திவிட்டு, செய்தி தாள்களை வாசித்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
வீட்டில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்து, அருகே இருந்த மருத்துவமனைக்கு கனகராஜை அழைத்து சென்றார்கள். ஆனால், அவர் காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். கனராஜின் மறைவு அக்குடும்பத்தினரை மட்டுமல்ல, அதிமுகவினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கனகராஜ் மறைவு பற்றி முதல்வர், துணை முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு எப்போது நடக்கும் என்பது பற்றி உறவினர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரன் அணியில் இருந்தவர் கனகராஜ். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியபோது அதற்கு கனகராஜும் ஆதரவு தெரிவித்தார். பின்னர் எடப்பாடி அணிக்கு திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் 21 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது கனகராஜ் மறைவால் இந்த எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

click me!