
மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களே, சந்திக்க அனுமதி பெற தவிக்கும் நிலையில், எந்த பொறுப்பிலும் இல்லாத பன்னீர்செல்வம் நேற்று பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது, சசிகலா மற்றும் தினகரன் சிறையில் இருக்கும் நிலையிலும், அவர்களின் குடும்பத்தை சேந்த திவாகரன் மற்றும் விவேக், கட்சியிலும், ஆட்சியிலும் மறைமுகமாக தலையிடுவதை பற்றி பன்னீர் எடுத்து சொன்னதாக கூறப்படுகிறது.
எடப்பாடி முதல்வராக இருந்தாலும், தினகரன் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதையும் அவர் பிரதமருக்கு சுட்டி காட்டியுள்ளார்.
மதுரையில், மறைமுகமாக தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட எம்.எல்.ஏ க்கள், தினகரனை திகார் சிறையில் சந்தித்து பேசிய எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி தலைமையில் இதே ஆட்சி தொடர்ந்தால், அதிமுக என்பதே தடையும் தெரியாமல் போய்விடும், அவருக்கு மக்கள் செல்வாக்கும் இல்லை, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களை கட்டுப்படுத்தும் திறனும் இல்லை என்று வெளிப்படையாகவே பிரதமரிடம் கூறி இருக்கிறார் பன்னீர்.
ஆனாலும், அதிமுக என்பது வலுவாக இருக்க வேண்டும், அதனால், நீங்களும், எடப்பாடியும் இணக்கமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் கூறி இருக்கிறார்.
அப்படி என்றால், முதல்வர் பதவியை தமக்கு பெற்று தந்தால் மட்டுமே, கட்சியின் வலிமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும், சசிகலா குடும்பத்தினரையும் அரசியலை விட்டு முழுமையாக அகற்ற முடியும் என்றும் பன்னீர் கூறி இருக்கிறார்.
அதை கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர், கொஞ்சநாள், பொறுமையாக இருங்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியதாக, டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், ஒரு முதல்வர் பிரதமரை சந்தித்தால், எப்படி மாநிலம் தொடர்பான கோரிக்கையை முன் வைத்ததாக கூறுவார்களா, அப்படியே செய்தியாளர்களிடம் கூறிவிட்டு நகர்ந்திருக்கிறார் பன்னீர்.