திரும்பவும் கரண்ட் கட் தொடங்கிடுச்சு... உங்க ஏரியாவில் எப்படி.? செந்தில் பாலாஜியை சீண்டும் நடிகை கஸ்தூரி..!

By Asianet TamilFirst Published Aug 4, 2021, 9:36 PM IST
Highlights

திரும்பவும் கரண்ட் கட் தொடங்கிவிட்டது. உங்க ஏரியாவில் எப்படி என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டியுள்ளார்.
 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல இடங்களில் மின் தடை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த மின் தடைக்கு அணில்களும் ஒரு காராணம் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக பராபரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் பராமரிப்புப் பணிக்கு பிறகு மின் தடையே இருக்காது என்றும் செந்தில்பாலாஜி உறுதியளித்திருந்தார்.
ஆனாலும், தமிழகத்தின் பல இடங்களில் மின் தடை ஏற்படுவதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மின் தடை தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “திரும்பவும் கரண்ட் கட் தொடங்கிவிட்டது. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து மின் சப்ளை இல்லை. சென்னையைச் சுற்றியிருப்போர், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரண்ட் கட் பற்றியே யோசிக்காதவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், இங்கு கரண்ட் கட் ஆகிறது. உங்க ஏரியாவில் எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ள கஸ்தூரி, இந்த ட்வீட்டரை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் டேக் செய்துள்ளார்.


ஏற்கனவே, மின் தடை விவகாரத்தில் மின் துறையையும் திமுக அரசையும் அமைச்சர் செந்தில்பாலாஜியையும் நடிகை கஸ்தூரி தொடர்ந்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!