தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என திமுக சார்பில் முதல்வர் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21 அன்று “ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து” அவசர கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது. அதிமுக அரசின் சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்தார்.
என்றாலும், “இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பது குறித்துப் போதுமான காரணங்களைச் சட்டம் நிறைவேற்றும்போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கிப் புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்விதத் தாமதமும் இன்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என முதல்வர் நேற்றைய தினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, முதல்வரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.