தமிழகத்தில் இடைத் தேர்தல் நடந்தால் அதில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற வரலாற்றை ஆர்.கே.நகரில் மாற்றிக் காட்டுவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு, ஆளுந்தரப்பு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய மோசமான சூழலில், தி.மு.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபித்திட கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் களப்பணி அவசியமானது என தொண்டர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தமிழக மக்கள் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையே வலிமை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் டிசம்பர் 11-ம் நாள் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.வும், தோழமை கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் நின்று பரப்புரையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் தொகுதி என்ற பெருமை மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதிக்கு கிடைத்ததே தவிர, ஒரு சராசரி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதிக்குரிய அடிப்படை வசதிகள் கூட அங்கு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் திமுகவின் வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதை இடைத்தேர்தல் களத்திலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி, தி.மு.க.வின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.