உடுமலை சங்கரின் குடும்பத்தினரே கவுசல்யாவுக்கு திருமணம் செய்து வைத்தது மனதை நெகிழச் செய்கிறது… மு.க.ஸ்டாலின் வாழ்த்து….

By Selvanayagam PFirst Published Dec 10, 2018, 8:35 AM IST
Highlights

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் இணைந்து கவுசல்யாவின் திருமணத்தை நடத்தி வைத்திருப்பது அவரின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த வெற்றி  என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் – கவுசல்யா தம்பதியை சாதி வெறி பிடித்த கவுச்ல்யாவின் குடும்பத்தினரே பட்டப் பகலில் அரிவாளால் வெட்டினர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடம் பிழைத்துக் கொண்ட  கவுசல்யா, தன் கணவர் சங்கரை இழந்த நிலையில் சாதிக் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார்.

கவுசல்யாவின் மறுமணத்துக்கு சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்குக் காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன்.

இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு. தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

click me!