மாப்பிள்ளைக்கு வழிவிட்ட ஸ்டாலின் !! தயாநிதி இடத்தில் சபரீசன் !!

By Selvanayagam PFirst Published Dec 10, 2018, 6:24 AM IST
Highlights

பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்பேற்க டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடன் தன்னுடைய மருமகன் சபரீசனையும் அழைத்துச் சென்றுள்ளார். சோனியா மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது மருமகனை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். முன்பு தயாநிதி மாறன் இருந்த இடத்தில் தற்போது தனது மருமகனை ஸ்டாலின் வெளிப்படையாக களமிறக்கியிருப்பது திமுக தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வரும்16-ந்தேதி  நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் டெல்லி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்தார்.

 இந்த சந்திப்பின் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பு குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நாங்கள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள மு.க. ஸ்டாலின், ஒரே நோக்கம் கொண்ட கொள்கைகள் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் நல்ல பலன்களையும் ஏற்படுத்தும். காங்கிரஸ் - திமுக கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில் உழைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இது ஒரு புறம் இருக்க இந்த முறை டெல்லி சென்ற ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனையும் அழைத்துச் சென்றதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சபரீசனுக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல என்றாலும், இது வரை அவர்க மறைமுகமாகவே அரசியல் பணி செய்து வந்தார்.

ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் இந்த சபரீசன்தான். தொடர்ந்து டெல்லி லாபியை கடந்த சில மாதங்களாக பார்த்து வந்தவர் சபரீசன்தான். ஆனால் மறைமுக தலைவராகவே செயல்பட்டு வந்த சபரீசன் தற்போது நேரடியாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

இது வரை டெல்லி பிரச்சனைகள் தயாநிதி மாறன் அல்லது கனிமொழி மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த பணி சபரீசனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது கனிமொழி மற்றும் தயாநிதி மாறனுக்கு பின்னடைவாகவே  கருதப்படுகிறது.

ஆனால் தயாநிதி தனது நண்பர் கௌதம் நட்டல் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால் அவர் டெல்லிக்கு செல்லவில்லை என தயாநிதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

click me!