
சட்டமன்ற குழுக்களை உடனடியாக அமைக்கா விட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என , சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இன்று தனது தொகுதி கொளத்தூரில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு , நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் திடீரென தலைமை செயலகத்துக்கு வந்தார். அவருடன் துரைமுருகன் , சேகர் பாபு மற்றும் மா.சுப்ரமணியம் ஆகியோர் வந்தனர்.
பின்னர் தனது அறைக்கு சென்று ஓபிஎஸ் வருகைக்காக காத்திருந்தார். ஸ்டாலின் காத்திருக்கிறார் என்றவுடன் தலைமை செயலகம் பக்கமே ஓபிஎஸ் வரவில்லை. பின்னர் மு.க.ஸ்டாலின் கிளம்பி வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. ஆண்டு தோறும் அமைக்கப்படவேண்டிய சட்டமன்றத்தின் 12 குழுக்களை இதுவரை சபாநாயகர் அமைக்கவில்லை. இது பற்றி கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. குழுக்கள் அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை எச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும் சட்டசபைக்கு அத்தாரிட்டி கவர்னர் தான். அவரிடமும் இது குறித்து புகார் அளிக்க இருக்கிறோம். கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்க வந்தோம் அவர் வராததால் அவர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.