
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக முதல்வர் வகித்து வந்த துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வருக்கான பணிகளை கவனித்து வருகிறார். இரண்டுமுறை அமைச்சரவை கூட்டத்தையும் நடத்திவிட்டார்.
முதலமைச்சர் பொறுப்புகளை ஓ.பன்னீர் செல்வம் கவனித்தாலும் பல விஷயங்களில் தங்கள் கட்சித்தலைவிக்கு பிடிக்காத எதையும் செய்ய கூடாது என நினைக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த போவதாக அறிவித்தார்.
அதற்குன் விமர்சனமும் எதிர்ப்பும் கிளம்பவே வேறு வழியில்லாமல் அதை அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமாக மாற்றினார். அந்த கூட்டத்திலும் எதிர்கட்சி வரிசையிலிருந்து இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள் மட்டுமே கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மான நகல்களை எடுத்துகொண்டு திடீரென ஸ்டாலினும் துரைமுருகனும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்று பார்த்தனர்.
திடீரென ஸ்டாலின் வந்ததால் தட்டி கழிக்க முடியாத ஓபிஎஸ் உதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியை தனது அறைக்கு அழைத்து வைத்து கொண்டார். இந்நிலையில் திமுக சார்பில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கடந்த 25 ஆம் தேதி ஸ்டாலின் கூட்டினார். இதிலும் 50% கட்சிகள் கூட கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்திலும் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மான நகலை எடுத்துக்கொண்டு வழக்கம் போல் ஸ்டாலின் தன்னுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், ரங்கநாதன் , சேகர்பாபு , மா.சுப்ரமணியம் ஆகியோரை அழைத்து கொண்டு சட்டமன்றத்திற்கு வந்தார். நிதியமைச்சர் ஓபிஎஸ்சை பார்க்க வேண்டு என காத்திருந்தார். ஆனால் மு.க. ஸ்டாலின் வருவதை அறிந்து தலைமை செயலகத்துக்கு வரவே இல்லை.
காத்திருந்து காத்திருந்து கடுப்பாகிப்போன ஸ்டாலின் தீர்மான நகலை முதல்வர் அலுவலகம் , பேரவை செயலாளர் அலுவலக்த்தில் கொடுத்துவிட்டு கடுப்புடன் பேட்டி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
டெய்ல் பீஸ்: இன்று ஓபிஎஸ் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக , அப்படி இருந்தும் ஓபிஎஸ் வரவில்லை. அவருக்கு பதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கரும்பு விவசாயிகளை சந்தித்தார்.