ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சிக்கிய பணம் தொடர்பான வழக்கில் முதல்வர் பழனிசாமி மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் ரத்தானது. அப்போது நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் சிக்கியது. இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமியின் பெயர்தான் முதல் பெயராக இருந்தது. ஆனால் இதுவரை முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு அமைச்சர் சரோஜாவை தானே அழைத்து சென்று காட்ட தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.