"நதிநீர் பிரச்சனைக்கு தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" - ஸ்டாலின் ஆவேசம்!!

First Published Jun 18, 2017, 11:02 AM IST
Highlights
stalin inspects kosasthalaiyar river dam


நதிநீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆறு தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்ட விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

கொசஸ்தலை ஆற்றில் இருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்து சேர்கிறது. இந்த நிலையில் ஆந்திர அரசு, லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத் துவங்கி இருக்கிறது. ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசஸ்தலை ஆற்றின் மூலமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. 

தடுப்பணைகள் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பாதிக்கப்படும். தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆந்திரா அரசு தடுப்பணை கட்டும் இடங்களை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நதிநீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

click me!