
சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அட்டப்பாடி அணைக் கட்டுவது தொடர்பான “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை வழங்கலாம்” என்று “சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு” அளித்த பரிந்துரையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் நிரந்தரமாக அனுமதி மறுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
“சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு அனுமதி கிடையாது” என்று ஒரு வரியில் கொடுக்க வேண்டிய உத்தரவிற்கு பதில் இப்படி சுற்றி வளைத்து “அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மட்டும் மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
“காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழக விவசாயிகளை நம்ப வைத்து கைவிட்டது போல் சிறுவாணி அணை விவகாரத்திலும் கைவிடுவதற்கு” இந்த உத்தரவு ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமே எழுகிறது, ஆனால் அதிமுக தலைமையில் உள்ள தமிழக அரசோ சிறுவாணியில் ஏதோ சாதித்துவிட்டது போல் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட நிரந்தரமாக அனுமதி மறுப்பது ஒன்றே சிறுவாணி ஆற்றை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளுக்கும் குறிப்பாக கொங்கு மண்டல விவசாயிகளுக்கும்,கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கும் நிரந்தர தீர்வாக அமையும் என்பதால் “சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.