
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்டப்டு 44 நாட்களை கடந்துவிட்டது. இந்தநிலையில் நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சாதாரண அறைக்குத்தான் ஜெயலலிதாவை அனுமதிக்கப்போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அத்தொகுதி அதிமுக பொறுப்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் நன்றாக தேறி வருவதாகவும், தற்போது அளிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சையின் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா எப்படி இருந்தாரோ, அதுபோன்று உற்சாகமாகவும், உத்வேகத்துடனும் டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வருவார் என தெரிவித்தார்.
தம்பிதுரை இப்படி பேசியவுடன் அங்கிருந்த அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.