
அதிமுகவின் இரு அணித் தலைவர்களையும் டெல்லிக்கு வரவழைத்து பிரதமர் நரேந்திர மோடி கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பணிகளை திமுகவினர் மேற்கொண்டனர். இதனை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவே குளங்கள் தூர்வாரும் பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது என்றார். ஆனால் திமுகவுக்கு நல்ல பெயர் நிடைத்துவிடும் என்ற பொறாமையில் இச்செயல்களை சில அரசியல் கட்சிகள் குறைகூறி வருவதாக தெரிவித்தார்.
திமுகவின் இத்திட்டத்தை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, விமர்சனம் செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் முதல் பெயராக இருப்பது எடப்பாடி பழனிசாமி, அவரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
மணல் மாபியா சேகர் ரெட்டியின் கூட்டாளியான ஓபிஎஸ்ஸை சந்திக்க மோடிக்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை சந்திக்க மோடிக்கு நேரம் இல்லை என குற்றம்சாட்டினர்.
அதிமுகவின் இரு அணிகளையும் டெல்லிக்கு அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதே பிரதமரின் வேலையாக உள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.