
பாஜக ஆட்சியில் ஜனநாயகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்… சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்ட சம்பவம், கருத்துக்கு மாற்றுக் கருத்து என்பதில் நம்பிக்கை இல்லாத சங்பரிவார அமைப்புகளின் ஆணவப் போக்கை எதிரொலிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சீதாராம் யெச்சூரி மீது டெல்லியில் சங்பரிவார் அமைப்பினர் நடத்தியுள்ள தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியில் டெல்லி மத்திய குழு அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது யெச்சூரி மீது நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல், ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உறுதி செய்துள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
ஒரு தேசிய கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்து இப்படியொரு தாக்குதல் நடத்தும் சுதந்திரத்தை சங்பரிவார அமைப்புகளுக்கு பாஜக அரசு தொடர்ந்து ஆதரவி அளிப்பதுடன், , அதை ஊக்கப்படுத்துவதும், வேடிக்கைப் பார்ப்பதும் மிகுந்த வேதனைக்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாத சங்பரிவார அமைப்புகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்றத் தாக்குதல்களில் ஈடுபட்டு, ஆணவப் போக்கில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் , இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க மத்யி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.