
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை, செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவின் பொது செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு அணிகளும் இணைவதற்கு, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். அதை செய்வதற்கு, பொதுக்குழு கூடி முடிவு எடுக்க முடியும். அதற்கான நடவடிக்கை விரைவில எடுக்கப்படும்.
அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு, இரு அணிகளும் இணைய வேண்டும். அப்படி இணைந்து கலந்து ஆலோசனை நடத்தினால், அதற்கான முடிவை தாராளமாக எடுக்கலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகவே இருக்கிறது. அதில், எந்த மாற்றமும் இல்லை. எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பொதுமக்களிடம் கூறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.