
கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினி, மாநிலம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை, மாவட்டம் வரியாக வரவழைத்து புகைப்படம் எடுத்து வருகிறார்.
முதல்நாள் நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தற்போதுள்ள ஆட்சி பற்றியும், அரசியல் கட்சிகள் பற்றியும் பரபரப்பாக பேசினார். அவரது பேச்சு, விரைவில் அரசியலில் களம் இறங்குவார் என எதிர் பார்க்கப்பட்டது.
அதனை உறுதி செய்யும் விதமாக, நாள் தோறும், ஒவ்வொரு டாப்பிக் வைத்து ரஜினி பேசினார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு, அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் உயிர் நண்பரும், ஆலோசகருமான ராஜ்பகதூர், தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என பரபரப்பாக பேசினார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-
நானும், ரஜினியும் பல ஆண்டுகள் நண்பர்கள். இருவரும் ஒன்றாக வேலை பார்த்தோம். கர்நாடக அரசு பஸ்சில் நான் டிரைவராகவும், அவர் கண்டக்டராகவும் இருந்தோம்.
அந்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்கும்போது, ரஜினி பிரமாதமா நடித்தார். அதை பார்த்து நண்பர்கள் எல்லோரும் சந்தோஷம் அடைந்தோம். அவரை சினிமாவில் நடிக்க செல்லும்படி வற்புறுத்தினேன்.
அதற்கு என்னால் முடியுமா என என்னிடம் கேட்டார். உன்னால் முடியாதது எதுவும் இல்லை என கூறி, சென்னைக்கு அனுப்பி வைத்தேன். அங்கு திரைப்பட கல்லூரியில் படித்து முடித்தவுடன், இயக்குனர் கே.பாலச்சந்தரை சந்தித்தார்.
ரஜினியிடம் பேசிய பாலச்சந்தர், “முதலில் தமிழை சரியாக பேச கற்று கொண்டு வா...” என கூறி அனுப்பிவிட்டார். இதனால், வழக்கமாக கன்னடத்தில் பேசிய நாங்கள், தமிழில் பேச ஆரம்பித்தோம். அதை தொடர்ந்து நன்றாக பேசிய அவர், ஒருநாள், குருஷேத்ரா நடகத்தில் நடித்தார்.
அந்த நடிப்பின்போது கன்னடத்தில் பேச வேண்டிய வசனத்தை, தமிழில் பேசினார். இதை கேட்டு நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். அதன்பிறகு, அவரை மீண்டும் சென்னைக்கு அனுப்பி, கே.பாலச்சந்தரை சந்திக்க செய்தேன்.
பலபோராட்டங்களுக்கு பின், பாலச்சந்தர் படத்தில் ஒரே காட்சியில் தோன்றி அறிமுகமான ரஜினி, இன்று உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
அவர், பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வர முடிவு செய்தார். ஆனால், நாங்கள் அதை மறுத்தோம். உன்னால் முடியுமா...? நன்றகா யோசனை செய்... முடியாத விஷயத்தில் இறங்காதே என கூறினோம்.
ஆனால், இன்று அவர் என்னிடம் கேட்கிறார். என்னால் முடியுமா. முடியாத விஷயத்தில் இறங்கலாமா என்று. அதற்கு நான் சொன்ன ஒரே பதில், உன்னால் சாதிக்க முடியும். நீ அரசியலுக்கு வருவதற்கு, உரிய நேரம் இது என்றேன். அதன்படி அவர் அறிவித்துவிட்டார். அவர் அரசியலுக்கு வருவார். தமிழகத்தில் ஆட்சி செய்வார். இது உறுதியான நம்பிக்கை
இவ்வாறு அவர் கூறினார்.