
தங்கள் சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வண்ணார் பேரவையினர் மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடந்த 4 ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தி பேசும் வகையில் அமைச்சர் எடுத்துக்காட்டுகளை சொல்லியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ எங்கள் தொழிலை முன்னிலை படுத்தி எடுத்துகாட்டு கூறியிருக்கலாம். ஆனால் எங்கள் ஜாதியை முன்னிலை படுத்தி பேசி உள்ளார் என கூறி தமிழ்நாடு வண்ணார் பேரவையினர் மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு செல்லூர் ராஜுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் வழிவந்த அதிமுகவில் ஜாதியை மையபடுத்தும் அமைச்சர் இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றும், அமைச்சரின் இத்தகைய இழிவான பேச்சுக்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.