போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய சிவசங்கர் பாபா.. டேராடூன் மருத்துவமனையில் இருந்து மாயாம்.. அதிர்ச்சியில் சிபிசிஐடி

By Ezhilarasan BabuFirst Published Jun 16, 2021, 11:37 AM IST
Highlights

டேராடூன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிவசங்கர் பாபா அங்கு காணவில்லை என்பதால் அவர் தப்பியோடிருக்கலாம் என்ற அடிப்படையில் அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

டேராடூன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிவசங்கர் பாபா அங்கு காணவில்லை என்பதால் அவர் தப்பியோடிருக்கலாம் என்ற அடிப்படையில் அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார். மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பொக்சோ வழக்கு உள்ளிட்ட 3 தனித் தனி வழக்குகளை 3 தனிப்படைகள் அமைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தரப்பில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான சுசில் ஹரி பள்ளி நிர்வாகி ஜனனி தெரிவித்திருந்தார். 

அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் தனிப்படையொன்று டேராடூனுக்கு நேற்று விரைந்தது. மற்ற இரு குழுக்கள் சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும் சிவசங்கர் பாபா-விற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவருக்கு நேற்றைய தினமே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் டேராடூனுக்கு சென்ற தனிப்படையினர் மூலம் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அவர் தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மேலும், சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தப்பியோடியிருக்கலாம் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!