எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு... அதிரிபுதிரியாகும் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2021, 12:32 PM IST
Highlights

எடப்பாடி, சசிகலா மற்றும் கொடநாடு வழக்கு இரண்டையும் பார்த்து பயந்து கொண்டே அரசியல் செய்ய வேண்டியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது அதிமுக பொதுக்குழு. முதலமைச்சராக வருவதற்கு சசிகலா ஆசைப்பட, ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்டது.

சிறைக்கு செல்வதற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியையும், கட்சியின் துணை பொதுச்செயலாளராக தினகரனையும் உருவாக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. இவருக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த தர்மயுத்தம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓ.பி.எஸ். அவரது இணைப்புக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமிருந்தது.

ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு நடந்த பொதுக் குழுவில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த பதவிகளின் முறையே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் உருவாக்கப்பட்டது.

இத்தகைய சட்ட திருத்தங்களை எதிர்த்து சசிகலாவும், முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், அதிமுக ஆட்சியில் இருந்ததால் இந்த இரட்டைத் தலைமைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறைவு செய்து விட்டு விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற, கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான் என்று உரிமை கோரி வருகிறார்.

 இதனால், கட்சிக்கு இரட்டைத் தலைமை வேண்டாம்; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களிடையே உயிர்ப்பித்து அது வலிமையாகத் துவங்கியது. இந்த சிந்தனை வலிமையாவதை எடப்பாடி உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை; விரும்பவில்லை. இதனையடுத்து, கட்சியின் விதிகளை மீண்டும் திருத்தி பொதுச் செயலாளராகிவிட வேண்டும் என ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகள் பலனிளிக்க வில்லை. இப்படி இரட்டை தலைமை, சசிகலா என முக்கோண சிக்கலில் இருக்கிறது அதிமுக. இதனால் நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் உற்சாகமின்றித் தவிக்கின்றனர். 

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி  சென்னையில் அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருந்த வாகனத்தில் செருப்பு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸும், எடப்பாடியும் ஒருவரையொருவர் பார்த்து பயந்து கொண்டே அரசியல் செய்கிறார்கள். அதிலும் எடப்பாடி, சசிகலா மற்றும் கொடநாடு வழக்கு இரண்டையும் பார்த்து பயந்து கொண்டே அரசியல் செய்ய வேண்டியுள்ளது. 

click me!