பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா பள்ளிக்கும் ஆப்பு... தமிழக அரசுக்கு சென்ற ஸ்ட்ராங்க் பரிந்துரை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 16, 2021, 3:07 PM IST
Highlights

சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுசில் ஹரி பள்ளியை மூட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைந்துள்ளது. 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லுவதை தடுக்கும் விதமாக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. 

இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா அங்கு இல்லை என்ற தகவல் வெளியானது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லியில் கைது செய்துள்ளனர். இன்றோ அல்லது நாளையோ அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுசில் ஹரி பள்ளியை மூட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைந்துள்ளது. 

இதுகுறித்த பரிந்துரையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி உண்டு உறைவிட பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம், பாலியல் புகாருக்குள்ளான சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் மாமல்லபுரம் அனைத்து மகளீர் காவல் துறையினர் போக்சோ (POCSO) உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளில், சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிருவாகத்தை சார்ந்தவர்கள் மீது வழங்கு பதிவு செய்துள்ளனர். 

வழக்கின் தன்மையைக் கருதி தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. (CB CID) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கல்வியாளர்கள் மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தள்ளனர். இதனிடையே இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் படிப்பினை தொடர விருப்பமில்லாமல் மாற்று சான்றிதழை பெற்று வேறு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் சேர்த்திட கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும், இப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா குழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்பட்டு பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், பள்ளி நிருவாகம் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தள்ளதால் பள்ளி கல்வித் துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழக அரசினை மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!