
முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காணுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கோவையில் கரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்திர்வை துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதல்வராக பதவி ஏற்று முதன் முதலாக கரூர் மாவட்டத்திற்கு வரும் 1 ஆம் தேதி வருகை தரும் முதல்வருக்கு கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். தாந்தோன்றிமலை அரசு பயணியர் விடுதியில் தங்கும் முதல்வர் 2 ஆம் தேதி திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் வரும் வழி எங்கும் 1 லட்சம் பேர் திரண்டு இருந்து வரவேற்பு அளிக்க வேண்டும்.
விழா மேடையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 76 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நம் பகுதிகளில் நலத்திட்டங்கள் பெற தகுதி இருந்தும், பெறாமல் இருப்பவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டறிந்து சொன்னால் அவர்களுக்கு முதல்வர் கையால் நலத்திட்டங்கள் வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும் தலைவர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியா முழுவதும் கிடைக்க பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நம் முதல்வர் இருக்க வேண்டும்.
எதிர்முகாமை சார்ந்த ஒரு மணி, திமுக ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள் என்று பேசியுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த கிரிப்டோ மணியாக இருந்தாலும் சரி, எந்த மணியாக இருந்தாலும் சரி. கறந்தபால் ஒருபோதும் மடி புகாது, ஊர்க்குருவி பருந்தாகாது, முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். இன்னும் நூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த பேராதரவே அதற்கு சாட்சி. கரூர் மாவட்டத்திற்கு 1 ஆண்டில் 3000 கோடி ரூபாய் திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.