அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்... நாளை கூடுகிறது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!

By Narendran SFirst Published Jun 26, 2022, 10:49 PM IST
Highlights

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இருதரப்பினரும், தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இதில் எடப்பாடிக்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்சியினர் ஆதரவு இருந்தது.

மேலும் படிக்க: எப்படி இருந்த கட்சி.. என் கண் முன்னால் அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? மனவேதனையில் துடிக்கும் கி. வீரமணி!

இதனிடையே இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதை ஏற்க எடப்பாடி மறுத்ததுடன் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து அதிமுக பொதுக்குழு நடத்தலாம், ஆனால் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கக்கூடாது. 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து வானகரம் திருமண மண்டபத்தில் 23 ஆம் தேதி காலை நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவராக தமிழ மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அதிமுகவுக்கு மட்டுமா.? தமிழகத்துக்கும் இபிஎஸ்தான் தலைமையேற்க வேண்டும்.. பொளந்துகட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்!

அப்போது கூட்டத்தில் பேசிய பலர், அதிமுகவில் ஒற்றை தலைமை தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றனர். இப்படி எடப்பாடி அணியினர், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் நடந்து கொண்டதால், பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர். இதைதொடர்ந்து அதிமுகவில் ஆதரவாளர்களை திரட்ட, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தனக்கு ஆதரவளிக்குமாறும், ஒற்றை தலைமைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை, எம்.ஜி.ஆர். மாளிகை அரங்கில் நாளை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் பெயர் இல்லாமல் தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தேனி சென்றுள்ள நிலையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அதிமுக ஒற்றை தலைமை..ஜெயலலிதாவுக்கு சசிகலா, இப்போ ? திருநாவுக்கரசர் சொன்ன சீக்ரெட்!

click me!