
செங்கோட்டையன் வகித்துவந்த சட்டப்பேரவையின் அவை முன்னவர் பதவிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி மற்றும் பன்னீரின் இந்த பதவி பறிப்பால், அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளாராம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழக சட்டமன்றத்தின் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால், சசியோடு சண்டை போட்டுக்கொண்டு தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக செயல்பட்டு வந்தார் பன்னீர்.
ஜெயலலிதா இருந்த பொது அமைச்சர் பதவி ஏதும் கொடுக்காமல் டம்மியாக வைத்திருந்த செங்கோட்டையனுக்கு பன்னீரின் அணியில் சேர்ந்த பாண்டியராஜன் பதவி பன்னீரின் அவை முன்னவர் பதவி என மொத்தமாக கொடுத்து முன்னிலை படுத்தியது சசிகலா குடும்பம்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரு அணிகளும் சமரசமடைந்து ஒன்றிணைந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். பாண்டியராஜனுக்கு வேறு ஒரு அமைச்சர் பதவியை வழங்கினர் அதன் பிறகு தற்போது வரை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த வருடத்திற்க்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், வரும் 8ஆம் தேதி இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நேற்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அவை முன்னவர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மதுசூதனன் பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றதால், அதிமுக அவைத் தலைவர் பதவி செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் நியமனம் செல்லாது எனவும், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே பொறுப்பில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் செங்கோட்டையன் வசம் இருந்த அவைத்தலைவர் பதவியும் பறிபோனது. அணிகள் இணைவுக்குப் பிறகு செங்கோட்டையன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு கை மாறியது. இன்னும் சில இலாகாக்களும் பறிக்கப்பட்டது.
ஆனாலும் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலோ அல்லது ஆட்சிமன்றக் குழுவிலோ பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருந்த பதவிகளை ஒன்னு ஒன்னாக பறித்து ஜெயலலிதா இருந்த சமயத்தில் இருந்தது போல செங்கோட்டையன் மீண்டும் டம்மியாக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் பொறுமையாக எடப்பாடி அணியிலேயே தொடர்ந்து வருகிறார்.
ஒவ்வொன்னாக பறிபோன நிலையில் இருக்கும் செங்கோட்டயனை, மேலும் அதிருப்தியடைய வைக்கும் விதமாக அவை முன்னவர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.