Seeman: விஸ்வரூபம் எடுக்கும் நடிகை விஜயலட்சுமி வழக்கு... கைதாகிறாரா சீமான்..? தவிக்கும் தம்பிகள்

By manimegalai aFirst Published Jan 19, 2022, 7:31 PM IST
Highlights

ஹரி நாடாரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று வெளியாகி உள்ள தகவல் நாதக தம்பிகளை தவிக்கவிட்டுள்ளது.

சென்னை: ஹரி நாடாரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று வெளியாகி உள்ள தகவல் நாதக தம்பிகளை தவிக்கவிட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 2020ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தம்மை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதிர வைத்தார்.

தமது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சீமான் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் உள்ளிட்ட சிலர் தம்மை மிரட்டுவதாகவும் கூறி இருந்தார். ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயல, பின்னர் காப்பாற்றப்பட்டார்.

அதிமுக ஆட்சியில் அவர் தொடுத்த புகார் அப்படியே நகராமல் இருக்க இப்போது ஆட்சிகளும், காட்சிகளும் மாறியிருப்பதால் இந்த விவகாரம் தற்போது தூசி தட்டப்பட்டு உள்ளது. விஜயலட்சுமி அளித்துள்ள புகாரின் பேரில்,  திருவான்மியூர் போலீசார் கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பதிவு செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வரும் அதே நேரத்தில் ஹரி நாடாரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். கடன் வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நடமாடும் நகைக்கடையான ஹரி நாடார், பெங்களூருவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர்.

இந் நிலையில் வழக்கின் திடீர் திருப்பமாக திருவான்மியூர் போலீசாரின் அனுமதியை ஏற்று, ஹரி நாடார் மீதான நடவடிக்கைக்கு கோர்ட் க்ரின் சிக்னல் காட்டி இருக்கிறது. இதன் பின்னர் பெங்களூரு விரைந்து சென்று சிறையில் உள்ள ஹரிநாடாரை கைது செய்தனர். விரைவில் அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.

இந்த வழக்கில் அடுத்தக்கட்டமாக சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி கிடக்கின்றன. தற்கொலை முயற்சியின் போது விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் திருவான்மியூர் போலீசார் ஹரி நாடாரை கைது செய்துள்ளனர்.

இப்போது அதே வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமானை கைது செய்து உள்ளே வைக்கும் வேலையில் தமிழக போலீசார் முடிவு செய்து அதற்கான வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எங்கே? எப்படி வைத்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம்? என்ன விதமான சட்டப்பூர்வ நடவடிக்கை? கைது நடடிவக்கை எடுத்தால் தமிழகம் முழுக்க இருக்கும் அவரது கட்சியினரை எப்படி சமாளிப்பது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படு சீரியசாக அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், இந்த தகவல்களை கேட்டறிந்த திமுகவினர் படு குஷியில் உள்ளனராம். திமுகவை பற்றி பேசக்கூடாத வார்த்தைகளை பேசியது, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பற்றி மேடைகள் தோறும் அவதூறாக பிரச்சாரம் செய்தது, ஒரு கட்டத்தில் செருப்பை எடுத்து காட்டியது என ஒவ்வொரு விவகாரத்தை லைன் கட்டி பேசும் அவர்கள், விரைவில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை மட்டும் பாருங்கள் என்றும் பேச ஆரம்பித்து இருக்கின்றனர்.

click me!