இது தான் நீங்கள் கூறிய விடியல் ஆட்சியா.? வரலாற்றுப் பழியை திமுக சுமக்க நேரிடும்.! எச்சரிக்கை விடுக்கும் சீமான்

By Ajmal KhanFirst Published Dec 4, 2022, 9:46 AM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப் பழியைச் சுமக்க நேரிடும்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது குற்றவியில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருப்பதற்கு நாம தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது எவ்விதக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாதென திமுக அரசு கைவிரித்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் காவல்துறை யினரால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்து, சட்டரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்தும் அதனைச் செயல்படுத்த மறுக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடியில் மண்ணின் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசப் பயங்கரவாதத்தை, 14 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமான கொடுஞ்செயலைக் கொலைக்குற்றமெனக் கருதி, அதனைச் செய்த காவல்துறையினர் மீதும், காரணமான அதிகார வர்க்கத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்காது, விதிமீறல் போலக் கருதித் தொடர்புடையவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையோடு நிறுத்திக்கொண்ட திமுக அரசின் போக்கு வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

படுகொலைக்கு சாட்சிகளும், ஆவணங்களும் இருந்தும்கூட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் திமுக அரசின் செயல்பாடு மிகப்பெரும் மோசடித்தனமாகும். போராட்டத்தின்போது மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி, சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாகவே மக்கள் நின்றார்கள் என்பதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ,எம்பி, அமைச்சராகி விட்டனர்- ஆர் எஸ் பாரதி வேதனை

காவல்துறையினரை ஏவிவிட்டு மக்களைக் கொன்றுகுவித்த அதிமுக அரசுக்கும், கொலையாளிகளென்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு? மாநில அரசின் கைகளிலே அதிகாரமிருந்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருந்தும், அதனை செய்வதற்குரிய ஆதரவு மக்களிடமிருந்தும் விடாப்பிடியாய் செய்ய மறுத்து கொலையாளிகளைக் காப்பாற்றுவது ஏன் முதல்வரே? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? யார் யார் குற்றவாளிகளோ அவர்களெல்லாம் நிச்சயமாகக் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, இன்றைக்கு அவ்வாக்குறுதியை மொத்தமாய் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கொலைக்குற்றவாளிகளைக் காப்பாற்றத் துணைபோயிருப்பதென்பது வெட்கக்கேடானது. இதுமட்டுமல்லாது, 

காயத்திரி ரகுராம் பதவியில் பிரபல இசையமைப்பாளர்..! அண்ணாமலை அதிரடி

 ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் துள்ளத் துடிக்கப் பச்சைப்படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனை செய்ய மறுத்து, மக்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் திமுக அரசு வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இப்போ லிப்டில் போனால் கூட பாதுகாப்பு இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சீண்டும் தமிழிசை..!

click me!