
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் சந்துப் நந்தூரி முன்னிலையில் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100-வது நாளில் அரசாங்கத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த அரசு அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பியதையொட்டி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் நிவாரணம் வழங்கினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதைத் அடுத்து தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும், உடனடியாக இந்த ஆலையை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.