Savuku shankar:ஜக்கி இந்த அளவிற்கு வளர திமுகதான் காரணம்.. ஸ்டாலினை டாராக்கிய சவுக்கு சங்கர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 14, 2021, 11:29 AM IST
Highlights

அதேபோல் தமிழக அரசினுடைய Town and Country planning துறை ஒரு இஞ்சுக்கு கூட ஈஷாமையம்  அனுமதி பெறவில்லை என்று தெரிவித்திருக்கிறது. முதலில் அவர்கள் வனத்தை ஆக்கிரமித்தார்கள் என்ற குற்றசாட்டு கூறுவதற்கு முன், அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

ஜக்கி வாசுதேவ் இந்த அளவிற்கு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு காரணம் திமுகதான், திமுகதான் ஜக்கிவாசுதேவை இந்த அளவிற்கு வளர்த்து விட்டிருக்கிறது என அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர்  குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் ஜக்கிவாசுதேவ் விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் என்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் ஆனால் திமுக அவர்களுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து நீண்ட நாட்களாகவே பல சர்ச்சைகள் இருந்து வருகிறது. பல ஏக்கர்  நிலப்பரப்பில் அந்த யோகா மையம் அமைந்துள்ளதுடன், அதில் மிகப்பெரிய ஆதியோகி என்ற சிவபெருமானின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அந்த வளாகம் காடுகளை அழித்தும், வனப்பகுதிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு ஈஷா யோகா மையத்தின் மீது இருந்து வருகிறது.  அதுமட்டுமின்றி, அந்த வளாகம் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. திமுக  ஆட்சி தொடங்கிய உடனேயே அதன் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு  மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இதே குற்றச்சாட்டை தெரிவித்ததுடன், இதில் மிக மூர்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு எதிராக கருத்து கூறிவந்தனர். ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா யோகா மையத்தில் முறைகேடுகளை தோண்டி எடுப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில்தான் ஈஷா யோகா மையம் தொடர்பாக தமிழக அரசு RTI ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த ஒரு யானை வழித்தடத்தையும் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை, அங்கு யானை வழித்தடங்களே இல்லை, காடுகளை அழித்தோ அல்லது வனப்பகுதியை ஆக்கிரமித்தோ கட்டிடங்கள் கட்டப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சவுக்கு சங்கர், ஈஷா யோகா மையத்துடன் திமுக சமரசம் செய்து கொண்டு விட்டது, இந்த அளவிற்கு ஜக்கி வாசுதேவ் வளர்ந்து நிறுபதற்கு திமுகதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசியிருப்பதாவது :- இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கொடுக்கப்பட்ட தகவல் என்பதால் இதையே தமிழக அரசின் கொள்கை முடிவு என்று நாம் எடுத்துக் கொள்ள தேவையில்லை, சில நேரங்களில்  ஆர்டிஐ தகவல்கள் தவறாக இருப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் இந்த தகவலை யார் கொடுத்து இருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த தகவலை பொறுத்தவரையில் வனத்துறை அதிகாரிகள் தந்திருக்கிறார்கள். வனத்துறை இதுபோன்ற ஒரு பதிலை கொடுத்திருப்பதுதான்  நம்மை போன்றவர்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாவட்ட வன அதிகாரியாக இருந்த திருநாவுக்கரசு என்ற அதிகாரி, chief Conservator of Forest அதிகாரிக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அதில், ஈஷா யோகா மையம் அனுமதியில்லாமல் வனப்பகுதியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 6-7-2011 இல் ஈஷா மையம் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தனர், அனுமதி கொடுப்பதற்குள்  4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர மீட்டர் அளவிற்கு கட்டிடங்களை எவ்விதமான அனுமதியும் இன்றி அவர்கள் கட்டியிருக்கிறார்கள் என்று மாவட்ட வன அதிகாரி, துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்போது அதே வனத் துறையில் இருந்துதான், ஈஷா எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று ஆர்டிஐ வெளியிடுகிறார்கள். ஆக, வனத்துறையில் இருந்து இப்படி ஒரு தகவல் வந்திருப்பது சந்தைகத்தை ஏற்படுத்துகிறது. அப்படி என்றால் மேலிடத்திலிருந்து இவர்களுக்கு உத்தரவு வராமல் இது போன்ற ஒரு ஆர்டிஐ பதிலை வனத்துறையினர் கொடுக்க முடியாது. மொத்தத்தில் திமுக ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டது என்றுதான் இதை நாம் பார்க்கவேண்டும். சமரசம் செய்து கொண்டு விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே நான் கூறுகிறேன். 

 

இதேபோல், சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசுக்கு (சிறைத் துறைக்கு) சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது. பின்னர் அந்த இடத்தை தங்களுக்கே கொடுத்து விடுங்கள், நாங்கள் மாற்று இடம் கொடுக்கிறோம் என பல அதிகார வர்க்கத்தை வைத்து அந்த பல்கலைக்கழகம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீண்டும் மீண்டும் அந்த அழுத்தத்திற்கு பதிலாக கமிட்டி அமைத்தது. ஆனால் இப்போது திமுக ஆட்சிக்கு வந்தும் கூட அது கைப்பற்ற படாமல் இருக்கிறது.  திமுக ஆட்சியைக் கைப்பற்றலாம் ஆனால் அந்த இடத்தில் ஒருபோதும் திமுக கைப்பற்றாது. அதற்கு காரணம் சாஸ்திரா பின்னணியில் இருப்பது "பார்ப்பன லாபி"  அந்த லாபியை கண்டு திமுக அஞ்சுகிறது. அதனால்தான் சாஸ்திரா கைப்பற்றிய இடத்தை திமுக கைப்பற்ற தயங்குகிறது.

இதேபோல்தான் ஈஷா விவாகரமும். இங்கு யானை வழித்தடங்கள் மறிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதே அதற்கு அவர்கள் மலைதள பாதுகாப்பு குழுவிடம் அவர்கள் அனுமதி பெற்றார்களா என்றால் இல்லை. எந்த அனுமதியும் பெறவில்லை, இந்த கட்டடங்கள் அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டது.  எனவே அதை அகற்ற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதேபோல் தமிழக அரசினுடைய Town and Country planning துறை ஒரு இஞ்சுக்கு கூட ஈஷாமையம்  அனுமதி பெறவில்லை என்று தெரிவித்திருக்கிறது. முதலில் அவர்கள் வனத்தை ஆக்கிரமித்தார்கள் என்ற குற்றசாட்டு கூறுவதற்கு முன், அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன். அந்த வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலையை மோடி அவர்கள் திறந்து வைத்ததினால்தான் யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்ற துணிச்சலில்  ஜக்கி வாசுதேவ திமிர்த்தனமாக இருக்கிறார்.  

எனவே இந்த விவகாரத்தில் திமுக அரசு ஜக்கிவாசுதேவுடன் சமரசம் செய்து கொண்டு விட்டது. குறிப்பாக பார்ப்பன அதிகார மையத்திடம் மோத திமுக விரும்பவில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள் ஜக்கிவாசுதேவ் எதையும் ஆக்கிரமிக்கவில்லை என ஆர்டிஐ வெளியிடுகிறார்கள். சமூக நீதிக்காக பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கட்சி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் திமுக, அவர்களே பார்த்துதான் அஞ்சுகிறது. அதனால்தான் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த இடத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை, இது தான் திமுகவின் சமூக நீதியா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜக்கி வாசுதேவ் க்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தது திமுக அரசுதான் இந்த அளவிற்கு ஜக்கிவாசுதேவ் வளர்ந்ததற்கு காரணம் திமுகதான் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

click me!