சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் சசிசகலா, அங்கிருந்து விடுதலையானவுடன் அதிமுகவுல் இணையவுள்ளதாகவும், அதன் பிறகு ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அதிமுகவில் தகவல் பரபரத்து கிடக்கிறது.
ஆனால் இது உண்மையா அல்லது வதந்தியா? என ஒரு தரப்பினர் பேசிக் கொண்டாலும், தற்போது தினகரன் அதிமுக எதிர்ப்பையும், பாஜக எதிர்ப்பையும் வெகுவாக குறைத்துக் கொண்டார். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கூட தினகரனைப் அவ்வளவாக விமர்சிப்பதில்லை என்றே கூறப்படுகிறது..
இது இப்படி இருக்க இன்று வெளியான நமது அம்மா நாளிதழில், “சுத்திகரித்த கங்கையாக சூதகமில்லா மங்கையாக தொண்டர்கள் கூடி நடத்துகிற தூயநதிச் சொரூபமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைகரத்தால் இரண்டாயிரத்து இருபத்து ஒன்று நோக்கி பீடு நடைபோடுகிற சத்தியத்தின் கோட்டைக்குள் அந்த சாத்தான்கள் ஒருநாளும் சரசமாட முடியாது. இது சத்தியம் சத்தியம் சத்தியம்” என்று அழுத்தமான வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எல்லோரும் ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பார்கள் என அதிமுகவுக்குள் பேச்சு எழுந்துள்ள நிலையில் இந்த பத்திரிக்கை கவிதை தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,
இனி சசிகலாவே வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்தாகிவிட்டது. ஆனால் சில ஊடகங்களின் துணையோடு சசிகலா வெளியே வருவார், தினகரன் முதல்வர் ஆவார் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு முடிவுகட்ட வேண்டுமென்றுதான் எடப்பாடியும், பன்னீரும் இணைந்து பேசி இப்படி ஒரு அறிவிப்புப் பிரகடனத்தை கவிதை மூலமாக வெளியிட வைத்திருக்கின்றனர் என்றும் தொண்டர்களிடையே பேச்சு எழுந்துள்ளது.