சசிகலா - ஓபிஎஸ் குறித்த கேள்வி... வாய்த் திறக்க மறுத்த செங்கோட்டையன்.!

By Asianet TamilFirst Published Oct 27, 2021, 7:38 AM IST
Highlights

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு எந்தப் பதிலையும் சொல்ல தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
 

செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரச்னைகளில் இருந்து தப்பிக்க நான் சட்டப்பேரவையில் தமிழக அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேசியுள்ளார். என்னை பற்றி கூறிய இதுபோன்ற கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டப்பேரவையில் பேசியதே வேறு. நான் யாரையும் புகழ்ந்து பேசவில்லை. சுப்பராயனுக்கு தெரிந்தால் அதைப் படித்து தெரிந்து கொள்ளட்டும்.


இப்போது மட்டுமல்ல, எந்தக் காலத்திலுமே நான் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா சாதனைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன். இவர்கள் வேண்டுமானால் இடத்துக்கு தகுந்தார்போல் மாறிக்கொள்ளலாம். ஆனால், அந்த நிலை எனக்கு வராது. சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு நான் எந்தக் கருத்தும் கூறத்தயாராக இல்லை” என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 


சசிகலா விவகாரம் அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைக் கட்சியில் சேர்ப்பது குறித்து செங்கோட்டையன் கருத்து கூற மறுத்திருக்கிறார். அதிமுக இரு அணிகளானபோது, செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம் என்று சசிகலா தரப்பு அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

tags
click me!