அதிமுகவை கைப்பற்றி கொள்ளையடிக்க திட்டமிடும் சசிகலா.. கனவு ஒருபோதும் நனவாகாது... சி.வி.சண்முகம் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Jun 17, 2021, 8:47 PM IST
Highlights

அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா கனவு காண்கிறார். அவருடைய கனவு ஒருபோதும் நனவாகாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசுகையில், “அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. இக்கட்சி தொண்டர்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் தனிப்பட்ட குடும்பத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றி கொள்ளை அடிக்கலாம் என்று சசிகலா திட்டம் போடுகிறார்.


அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில்கூட சசிகலா இல்லை.  அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் அதிமுகவில் இனி எப்போதுமே இடமில்லை. இந்த இயக்கத்தை எப்படியாவது அபகரித்துக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சசிகலா யார், யாருக்கெல்லாம் தொலைபேசியில் பேசி நாடகம் ஆடி வருகிறார். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தெள்ளத்தெளிவாகத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் எப்படியாவது அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா கனவு காண்கிறார். அவருடைய கனவு ஒருபோதும் நனவாகாது.
சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் வீண் பழியை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். ஜெயலலிதாவின் சாபத்தால்தான் சசிகலா ஊழல் வழக்கில் சிறை தண்டனையைப் பெற்றார்.அதிமுகவில் அடிப்படை உறுப்பினராககூட இல்லாத சசிகலாவுக்கு அதிமுகவைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது. இன்றைக்கு நமக்கு எதிரி திமுக மட்டுமல்ல, இந்த இயக்கத்துக்குத் துரோகம் விளைவிக்கும் துரோகிகளை இனம் கண்டு நம் இயக்கத்தை ஜாக்கிரதையாக நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தை எக்காலத்திலும் நெருங்கவிடக் கூடாது.” என்று சி.வி.சண்முகம் பேசினார்.
 

click me!