டிடிவி தினகரனுக்கு தடா...! சுற்றுப்பயணத்திற்கு முன்பு சசிகலா போட்ட உத்தரவு..!

By Selva KathirFirst Published Jul 22, 2021, 10:46 AM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலாவால் செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சி என்பதால் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல எந்த தடையும் இருக்காது. 

விரைவில் தொண்டர்களை சந்திக்க மாவட்டவாரியாக புறப்பட உள்ள சசிகலா அதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று டிடிவி தினகரனுக்கு உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று டிடிவியிடம் சசிகலா மிகவும் கண்டிப்பாக கூறியிருந்தார். ஆனால் அதனை ஏற்காமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததோடு மட்டும் அல்லாமல் 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றி அமமுக படு தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு தினகரன் தற்போது வரை ஆக்டிவான எந்த அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். மேலும் அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் வரிசையாக திமுக மற்றும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இதனால் தினசரி கட்சியில் இருந்து செல்லும் நிர்வாகிகளுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகள் நியமனத்தில் தினகரன் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே சசிகலா விரைவில் அரசியலுக்கு முறைப்படி மறுபிரவேசம் செய்ய உள்ளார். இதற்கு முன்னோட்டமான பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் ஓரிரு நாளில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கான பணிகளையும் சசிகலா செய்து வருகிறார். இதற்காக தமிழக அரசிடம் சசிகலா தரப்பில் இருந்து அனுமதியும்கோரப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து சசிகலா தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலாவால் செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சி என்பதால் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல எந்த தடையும் இருக்காது. அதே போல் மாவட்ட வாரியாக செல்லும் போது தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடம் நேரடியாக பேசவும் சசிகலா தயாராகி வருகிறார். இது மட்டும் அல்லாமல் நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் செய்தியாளர்களை சந்திக்கவும் சசிகலா முடிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எதிலும் தினகரன் பங்கேற்க கூடாது என்று சசிகலா உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறார்கள். காரணம் கடந்த முறை சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் தினகரன் ஏற்பாட்டில் தான் நடைபெற்றன. ஆனால் அப்போதெல்லாம் சசிகலாவை பார்க்க வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அமமுக தொண்டர்கள் என்று கூறி சமாளித்தது அதிமுக. எனவே இந்த முறை மாவட்டந்தோறும் தன்னை பார்க்க தொண்டர்கள் திரளும் இடத்தில் தினகரன் இருந்தால் அந்த கூட்டம் அமமுக என்று மறுபடியும் அதிமுக சொல்லிவிடும் என்று சசிகலாவிற்கு தெரியும். எனவே தான் தினகரனுக்கு சசிகலா தடை போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!