பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா - பொதுக்குழு,செயற்குழு கூடுகிறது

First Published Dec 7, 2016, 4:55 PM IST
Highlights


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில்,  சசிகலா நடராஜன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றே அவரை அ.தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள் அழைத்து வந்தனர். இதனால் வேறு யாரும் அந்த பதவிக்கு நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மரணம் காரணமாக அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக யார் பொறுப்பு ஏற்பார் என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியானது, ஆட்சியையும், கட்சியையும் நிர்வகித்து நடத்தும் அதிகாரம் மிக்க பதவி என்பதால் “புதிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர்” யார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்படலாம்  என்ற தகவல்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக இந்த மாதம் 20-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது. வழக்கமாக அங்கீகரிக்கப் பட்ட தேசிய கட்சிகள் ஆண்டுக்கு   ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை  செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று விதி உள்ளது.

அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் 18-ந்தேதி அ.தி. மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் இப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு ஒப்புதல் பெற பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மீண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அ.தி.மு.க. செயற்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் 38 பேர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 270 பேர் உள்ளனர். இதே போல் பொதுக்குழு வில் 3 ஆயிரத்து 300 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் அனைவரும் பொதுச்செயலாளர் நிய மனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

click me!