
வேலூர்
ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் ஜெயலலிதாவின் பல்வேறு சொத்துகளை ஒரு குடும்பத்தினர் (சசிகலா குடும்பத்தினர்) சதி செய்து அவர்களுடைய பெயருக்கு மாற்றி கொண்டனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வேலூர் மேற்கு மாவட்ட, வேலூர் கிழக்கு பகுதி அதிமுகவின் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கத்தில் அருகே நேற்று இரவு நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு பகுதிச் செயலாளர் எஸ்.குப்புசாமி தலைமை வகித்தார். பகுதி மாவட்ட பிரதிநிதி உமா விஜயகுமார், முன்னாள் நகரச் செயலாளர் சி.கே.மணி, முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் எஸ்.குமார், பகுதிப் பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி அவைத்தலைவர் டி.பிரகாசம் வரவேற்றுப் பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “அதிமுக தொண்டர்கள் கட்சிக்கு வந்த பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றியதால்தான் தற்போது அதிமுக 46-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடுகிறோம்.
ஒரு குடும்பத்தை எதிர்த்துதான் அதிமுக ஆரம்பிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை காக்க உருவாக்கப்பட்டது. என்ன நோக்கத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை ஆரம்பித்தாரோ அதனை வழிநடத்தி ஜெயலலிதா கட்டி காத்தார். அவர் மறைவிக்குப் பின்னர் ஒரு குடும்பத்தினர் தங்கள் பிடியில் அதிமுகவை கொண்டுவர நினைக்கிறார்கள்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நலமாக உள்ளார் என்று கூறி, அனைவரையும் நம்ப வைத்து விட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் அவருடைய பல்வேறு சொத்துகளை ஒரு குடும்பத்தினர் சதிசெய்து அவர்களுடைய பெயருக்கு மாற்றி கொண்டனர்.
பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் பணம், பொருளுக்கு ஆசைப்பட்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். பதினெட்டு எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டனர். உண்மையான தொண்டர்கள் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது” என்று அவர் பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, தலைமை பேச்சாளர் சங்கரதாஸ் ஆகியோரும் பேசினர்.
இதில், வேலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் டி.கே.முருகேசன், ஆவின் தலைவர் வேலழகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஜி.ஏ.டில்லிபாபு, பொதுக்குழு உறுப்பினர் விஜிகர்ணல், கணியம்பாடி ஒன்றியச் செயலாளர் ராகவன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், இளம்பெண், இளைஞர் பாசறை டி.டி.ஆர்.ரகு மற்றும் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் வேலூர் நகரக் கூட்டுறவு துணைத் தலைவர் கே.எம்.ஆனந்தன் நன்றித் தெரிவித்தார்.