கிடுக்கிப் பிடியில் சசிகலா குடும்பம் !! வேலைக்காரர்கள், டிரைவர்கள் பெயரில் சொத்து குவிப்பா ? 15 வங்கிக் கணக்குகளுக்கு சீல் !!!

First Published Nov 14, 2017, 7:56 AM IST
Highlights
sasikala family bank accounts sezied


சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தங்களுடைய வேலைக்காரர்கள்,மற்றும் டிரைவர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனரா என வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 15 வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின்  உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 9 ஆம் தேதி முதல் நேற்று வரை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள்.

 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளர் புகழேந்தி, டாக்டர் சிவகுமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியரிடம் விசாரணை நடத்திய வருமான  வரித்துறையினர் விவேக் ஜெயராமனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இரவு 10 மணி வரை விவேக்கிடம் அதிகாரிகள் கிடுக்கிப்டி விசாரணை நடத்தினர். இதையடுத்து விவேக்கை விடுவித்த அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

சசிகலா உறவினர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில். பெரும்பாலான சொத்துக்களை   அவர்கள் நேரடியாக தங்களது பெயரில் வாங்காமல் வேலைக்காரர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள், வர்த்தக தொடர்பில் இருப்பவர்கள் என பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 355 பேருக்கு சம்மன் அனுப்பவும், வேலைக்காரர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 15 வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கையால் சசிகலா குடும்பம் சிக்கித் தவித்து வருகிறது.


 

 

click me!