
எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் கூவத்தூர் கிராமமே பிரபலமடைந்து விட்டது.
ஆனால் கூவத்துரில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் புகழ் அவர்கள் தொகுதியில் மங்கி கொண்டே செல்கிறது.
பெரும்பாலான தொகுதிகளில் எம்எல்ஏக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே உள்ளனர் அவர்களுக்கு வாக்களித்தவர்கள்.
அதாவது மக்களை சந்தித்து விட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டு தற்போது ஓங்கி ஒலிக்கவும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில்தான் எம்எல்ஏக்களை தன் வசப்படுத்தும் குதிரை பேரம் ஜரூராக நடைபெற்று வரும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரொக்கமாக பணம் கொடுக்க முடியாமல் சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் திணறி வருவதாக தெரிகிறது.
பணம் கொடுக்க ஓபிஎஸ் தரப்பில் தயாராக இருந்தும் எம்எல்ஏக்கள் வெளியே வராததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.
ஆனால் சசிகலா தரப்பிலோ 120 எம்எல்ஏக்கள் கையில் இருந்தும் சில எம்எல்ஏக்கள் செய்யும் சேட்டையால் விழி பிதுங்கி போயுள்ளனர்.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உலவ விட்டால் மனம் மாறி விடுவார்கள் அல்லது மூளை சலவை செய்யப்பட்டு விடுவார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படலாம் என்ற அச்சம் சசிகலா தரப்புக்கு இருப்பதால் பெரிய அளவில் டீல் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 2 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் பணம் என ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் கமிட்மென்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் எம்எல்ஏக்கள் வெளிய வந்து விட்டால் அவர்கள் கோழி கொத்துவது போல கொத்தி அவர்கள் மனதை கரைய வைக்கும் அதிரடி திட்டங்களும் ஓபிஎஸ் தரப்பில் வகுக்கபட்டுள்ளதாம்.
சசிகலா தரப்பை விட ஒரு மடங்கு அதிகமாக கவனிப்புகளை நடத்த இவர்களும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
எது எப்படியோ இந்த முறை அதிமுக எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் தான்.