இங்கே உனக்கென்ன வேலை? செருப்பு, கற்களை வீசி சி.ஆர்.சரஸ்வதியை துரத்தியடித்த ஆர்.கே.நகர் பொது மக்கள்

First Published Apr 1, 2017, 6:32 AM IST
Highlights
saraswathy attack


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலா அணியைச் சி.ஆர்.சரஸ்வதி வேன் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

சென்னை ஆர்.கே.நகர் நேதாஜி நகரில் உள்ள பர்மா ஜூம்மா தமிழ் முஸ்லிம்கள் பள்ளிவாசல் பகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு டி.டி.வி.தினகரன் பிரச்சாரம் செய்ய வந்தததால் ஓபிஎஸ் அணியினர் தங்களது பிரச்சார கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டனர்.

ஓபிஎஸ்ஐப் பொறுத்தவரை அவருக்கு ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

ஆனால் டி.டி.வி.தினகரனுக்கு வெளியூரைச் சேர்ந்தவர்கள் தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் எந்த இடத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரியாது அவர்கள் குழம்பி வருகின்றனர்

இந்நிலையில்  மேயர் பாசுதேவ் தெரு, வீராகுட்டி தெரு சந்திப்பில்  ஓபிஎஸ் தரப்பில் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது டி.டி.வி.தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சசிகலா அணியின் செய்தித் தொடர்பாள்ர் சி.ஆர்.சரஸ்வதி அங்கு வந்தார்.

இதையடுத்து சி.ஆர்.சரஸ்வதியிடம் போலீசார் வேறு பக்கம் சென்று பிரச்சாரம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சி.ஆர்.சரஸ்வதி மீது சிலர் தக்காளியை வீசினர், தொடர்ந்து கற்களையும், செருப்புகளையும் அவர் மீது வீசத் தொடங்கினர். அம்மாவுக்கு துரோகம் செய்த சரஸ்வதியே உனக்கு இங்கு என்ன வேலை? என கேட்டு அங்கிருந்து துரத்தி அடித்தனர்

இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட  சி.ஆர்.சரஸ்வதி , ஓபிஎஸ்ஐப் பார்த்து அண்ணே நீங்களே இப்படி செய்யலாமா? என்று பரிதாபமாக கேட்டார்.

 

 

click me!