தொகுதிக்கு ரூ.5 கோடி! யாருகிட்ட இருக்கு ரூ.100 கோடி! புலம்பும் தினகரன்!

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 10:38 AM IST
Highlights

தொகுதிக்கு ரூ.5 கோடி என்று 100 கோடி ரூபாய் செலவு செய்தால் தான் இடைத்தேர்தலில் அ.ம.மு.கவால் கணிசமான தொகுதிகளில் வெல்ல முடியும் என்ற நிலையில் பணத்திற்கு என்ன செய்வது என்று தினகரன் புலம்ப ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதிக்கு ரூ.5 கோடி என்று 100 கோடி ரூபாய் செலவு செய்தால் தான் இடைத்தேர்தலில் அ.ம.மு.கவால் கணிசமான தொகுதிகளில் வெல்ல முடியும் என்ற நிலையில் பணத்திற்கு என்ன செய்வது என்று தினகரன் புலம்ப ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் என்று சபாநாயகர் அறிவித்த உடனேயே உயர்நீதிதமன்றத்தை அணுகியது தினகரன் தரப்பு. இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை இரண்டுவிதமாக வழங்கிய உடனேயே மேல்முறையீடு வேண்டாம் என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் தங்கதமிழ்செல்வன். ஆனால் 3வது நீதிபதி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தினகரனுக்கு தெரியும்.

பணம் செலவழிக்காமல் இடைத்தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதால் தான் அப்போதும் கூட தினகரன் நீதிமன்றத்தையே நாடிச் சென்றார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செல்லும் என்று உத்தரவு வெளியான பின்னரும் கூட உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றே தினகரன் கருதுகிறார். ஏனென்றால் ஆளும் கட்சி என்கிற நிலையில் அ.தி.மு.க மிகுந்த பண பலத்துடன் 20 தொகுதிகளிலும் களம் இறங்கும். 

தி.மு.கவும் கூட தங்களிடம் ஏற்கனவே உள்ள கட்டமைப்பு மூலம் இடைத்தேர்தலை சிரமம் இன்றி எதிர்கொள்ளும். ஆனால் அ.ம.மு.கவை பொறுத்தவரை காசு செலவழிக்காமல் பூத் கமிட்டி கூட அமைக்க முடியாது. என்ன தான் பணம் கையில் இருந்தாலும் அதனை வெளியில் எடுத்து செலவழிப்பது தான் தினகரன் தரப்பினரிடம் உள்ள பிரச்சனை. இதனால் தான் மதுரையில் ஆலோசனையை முடித்து தங்க தமிழ்செல்வனை வைத்து மேல்முறையீடு என்று அறிவிக்க வைத்தார் தினகரன். 

ஆனால் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்க எம்.எல்.ஏக்களில் பலர் மேல்முறையீடு என்கிற முடிவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இடைத்தேர்தலை எதிர்கொள்வோம் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. ஒரு தொகுதி என்றால் கூட பரவாயில்லை, 2 தொகுதிகள் என்றால் கூட சமாளித்துவிடலாம் ஆனால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் பணத்தை செலவழிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று தினகரன் புரிந்து வைத்துள்ளார். 

மேலும் ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட 20 தொகுதிகளுக்கும் தேவையான 100 கோடி ரூபாயை எப்படி வெளியே எடுப்பது என்பது தான் தினகரனை தற்போது புலம்ப வைத்துள்ளதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

click me!