
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதைப்போல ஹவாலா பாணியில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை விட கூடுதலாக 40,707 வாக்குகள் பெற்று மதுசூதனனை சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்று உள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்தது.
இந்த இடைத்தேர்தலில் பணநாயகம் வென்று உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரே மாதிரியான காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. ஹவாலா பாணியில் டி.டி.வி.தினகரன் வெற்றிபேற்றுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்,
இந்நிலையில் ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது என விமர்சனம் செய்து உள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ள அமைச்சர் . தேர்தல் ஆணைய விதிகளை மதித்து, நாங்கள் நியாயமாக செயல்பட்டோம் என கூறினார்.
தினகரன் வெற்றி ஆட்சியை பாதிக்காது. கட்சியில் இருந்து ஒரு செங்கல்லை கூட அவரால் எடுக்க முடியாது. தினகரன் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளார். தினகரனின் வெற்றி இடைத்தேர்தலோடு முடிந்து விடும் என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை ஏமாற்றியர்வர்கள், மக்களை ஏமாற்றி தற்காலிக வெற்றி பெற்று உள்ளனர். பணத்தை கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெறுவது சரியானது இல்லை. இரட்டை இலை சின்னம் மீது பற்று வைத்துள்ளவர்கள் நிறம் மாறமாட்டார்கள் என ஜெயகுமார் குறிப்பிட்டார்..
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் ஹவாலா பாணியில் தினகரன் வெற்றி பெற்று உள்ளார் என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் 2019-ல் வரும் பொதுத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டார்.