சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரன் சார்பில் பணப் பட்டுவாடா நடந்தது தொடர்பாக, அறிக்கை அளிக்க, தனி தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி, இன்று டெல்லி ,புறப்பட்டு செல்கிறார். இதையடுத்து , தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி,டி,வி,தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதில் தமிழக அமைச்சர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் வார்டு வாரியாக எவ்வளவு பணம் விநியோகம் செய்தார்கள் என்பது போன்ற விவரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன,
இந்த ஆவணங்கள் நேற்று மாலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று, தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பன்னீர் அணியினர் பணம்வழங்குவதற்காக, 'டோக்கன்' வழங்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப் பட்டு உள்ள, தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமை செயலகத்தில், தேர்தல் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.
இந்தசூழ்நிலையில், தனித்தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, பணம் பட்டுவாடா குறித்து, தேர்தல் கமிஷ னுக்கு அறிக்கை அளிப்பதற்காக, நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தேர்தல் கமிஷன் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, 'ஆர்.கே.நகர்
இடைத்தேர்தலை, ஜூன், 5க்குள் நடத்தி முடிக்க வேண்டும். போதிய கால அவகாசம் இருப்பதால், தேர்தல் கமிஷன் நினைத்தால், தேர்தலை ஒத்திவைக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, தேர்தல் கமிஷன் அவசரமாக, டெல்லிக்கு அழைத்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான, ஆதாரங்கள் சிக்கி உள்ளன. வருமான வரித்துறையும், தாங்கள் நடத்திய சோதனை குறித்து, தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, டில்லி வரும்படி, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி உத்தரவிட்டுள்ளார்.
அதனை ஏற்று, ராஜேஷ் லக்கானி இன்று காலை, விமானம் மூலம் டில்லி செல்கிறார். ஆலோசனைக்குப்பின், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என, தெரிகிறது.