ஆர்.கே.நகரில் மின்னணு இயந்திர வாக்குப்பதிவா? வாக்குசீட்டு மூலம் வாக்குப்பதிவா?...இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்….
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குபதிவு நடத்துவதா அல்லது வாக்கு சீட்டு மூலம் வாக்குபதிவு நடத்துவதா என்ற முடிவு இன்று தெரிவிக்கப்படும்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ம் தேதி மாலையுடன் நிறைவுப் பெற்றது.
இதற்கு மொத்தம் 127 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 45 மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன. 82 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 63 வேட்பாளர்களுக்கு மேல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் மின்னணு மூலமாக வாக்குபதிவு நடத்த இயலாது, வாக்குசீட்டு மூலமாகவே வாக்குபதிவு நடத்த முடியும்..
அதன்படி வாக்குசாவடி அறையில் 4 வாக்குபதிவு இயந்திரங்களை மட்டுமே இணைக்க முடியும் . ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 பெத்தான்களே இருக்கும் 4 வாக்கு இயந்திரங்களில் 64 பெத்தான்களும் அதில் நோட்டாவிற்கு ஒன்று என்று மொத்தம் 63 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே இடம் பெற செய்ய முடியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதால் மின்னணு மூலம் வாக்குபதிவு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
இதன் பின்னர்தான் ஆர்,கே.நகரில் மின்னணு இயந்திர வாக்குப்பதிவா? அல்லது வாக்குசீட்டு மூலம் வாக்குப்பதிவா? என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியும். எனவே இன்று அது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.