
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடை தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
தொகுதி முழுவதும் அதிமுக சசிகலா அணியினர், வெளி மாவட்டத்தில் இருந்து ஆட்களை வரவழைத்து பிரசாரம் செய்வதாகவும், வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்வதாகவும் அனைத்து கட்சியினரும் புகார் செய்துள்ளனர்.
இதையொட்டி கடந்த 4 நாட்களுக்கு முன் வெள்ளி விளக்குகளை வினியோகம் செய்த 3 உள்பட 5 பேரை தேர்தல் அதிகாரிகள் பிடித்து, கைது செய்தனர். பொதுமக்களுக்கு வினியோம் செய்ய இருந்த ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வது தொடர்கிறது.
இந்நிலையில், நேற்று இரவு திமுக தொண்டர்கள் பார்த்தசாரதி, ஷேக் உள்பட சிலர், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணித்து வந்தனர்.
அப்போது, நள்ளிரஹிவ சுமார் 12 மணியளவில், நேதாஜி நகரில் சிலர், கையில் ஒரு பையுடன் சுற்றி வந்தனர். அவர்களிடம் கேட்டபோது, அதிமுக சசிகலா ஆதரவு வேட்பாளர் தினகரனுக்காக பிரசாரம் செய்ய வந்தோம் என கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் வீடு வீடாக சென்று கதவை தட்டி, தூங்கி கொண்டிருந்த பொதுமக்களை எழுப்பி பணம் கொடுப்பது தெரிந்தது. அதை திமுக தொண்டர்கள், தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர். படுகாயமடைந்த பார்த்தசாரதி, ஷேக் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.