சென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..!

Published : Oct 26, 2020, 10:28 AM ISTUpdated : Oct 26, 2020, 10:30 AM IST
சென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..!

சுருக்கம்

போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம்  என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரியிருக்கிறது. மனித நலனுக்கு எதிரான இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள 9 எரிஉலைகளிலும் தலா 100 டன்கள் வீதம் தினமும் 900 டன்கள் குப்பைகள் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கிறது. குப்பையில்  இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ற புரட்சிகரமான தலைப்புடன் இத்திட்டம் முன்வைக்கப்படும் போதிலும், இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிக மிகக் குறைவு ஆகும். அதேநேரத்தில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாததாகும். பொருளாதார அடிப்படையிலும் இது தோல்வித்  திட்டமாகும். சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு நாளைக்கு 900 டன் குப்பைகள் எரிக்கப்பட்டால் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்படும். எரிஉலைகளில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து  டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு  உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவையும் வெளியாகும். இவற்றில் பெரும்பான்மையான வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவை; காற்றில்  அழையாமல் நிலைத்திருக்கும் இவை மனித உடலுக்குள் சென்றாலும் கூட அழியாமல் நிலைத்திருக்கும். 

இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் குப்பை எரிஉலைகள் மிகக் கடுமையாக பாதிக்கும். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது. இவ்வளவு மோசமான ஆபத்துகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய எரிஉலைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் மின்சாரமாவது உற்பத்தி செய்ய முடியுமா? என்றால் அதுவும் இல்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். அதுமட்டுமின்றி, குப்பை மேலாண்மை தொடர்பான மத்திய அரசின் விதிகளுக்கு இந்தத் திட்டம் எதிரானது ஆகும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொழில்நுட்ப அடிப்படையில் சாத்தியமற்றது. அதனால், குப்பை எரிஉலை திட்டம் நிச்சயமாக தோல்வியடையும்; பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்த உலகிலும் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் தீமைகளுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதல் தான். புவி வெப்பமயமாதலுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று குப்பையை எரிப்பது ஆகும். அனல் மின்னுற்பத்தி நிலையங்களால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அனல் மின்நிலையங்களை விட மோசமான பாதிப்புகளை எரிஉலைகள் ஏற்படுத்துகின்றன. 

நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு  பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்களை எரிஉலை மின்னுற்பத்தி நிலையங்கள் வெளியிடுகின்றன. எந்த நன்மையும் செய்யாத, காற்று மாசு, உடல்நலக் கேடு, புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலைகளை சென்னையில் அமைப்பது தற்கொலைக்கு சமமான முடிவு ஆகும். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9 குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அத்துடன், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா மாநகர கோட்பாட்டை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!