
கேரளாவில் வடமாநில தொழிலாளா்கள் தங்குவதற்கு வசதியாக பாலக்காட்டில் 640 போ் தங்கும் அளவில் தனி விடுதியை கட்டியுள்ளது திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களிலும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் , அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த வட மாநில தொழிலாளா்கள் கட்டுமான பணி, ஓட்டல் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனா். இவர்களுக்கு குறைந்த அளவு கூலியே வழங்கப்படுவதால் உள்ளூா் உரிமையாளர்கள் இதுபோன்ற தொழிலாளா்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனா்.
கேரளாவில் மட்டும் வட மாநில தொழிலாளார்கள் 25 லட்சம் பேர் வேலை வெய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இதனால் அச்சமடைந்த வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். காலப்போக்கில் இது சரியானாலும், அவர்களுக்கு சரியான இருப்பிட வசதி செய்து தரப்படும் என்றும், அவா்களது குழந்தைகளுக்கு போதிய பள்ளிக்கூடங்கள் கட்டித்தரப்படும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் கேரள அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் இதற்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன.
3 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் 640 பேர் வரை தங்கலாம். 32 சமையலறை, 86 பாத்ரூம்கள், 8 டைனிங் அறைகள் இதில் உள்ளன. இதை விரைவில் முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைக்க உள்ளார்
திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களிலும் இது போன்ற விடுதியை கட்ட இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.