OPS - EPS : மாற்றுத்திறனாளிகள் கைது… கடும் கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்… உடனே விடுவிக்கவும் கோரிக்கை!!

By Narendran SFirst Published Dec 14, 2021, 6:41 PM IST
Highlights

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை, தங்களுடைய குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போதவில்லை என்றும், எனவே, அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று, தமிழகத்திலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளாகிய தங்களை சந்தித்த போது, தான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் உங்களது அனைத்துக் கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததை நினைவுகூர்ந்த மாற்றுத் திறனாளிகள், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி இன்று, மாநிலம் முழுவதும் சுமார் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதாகக் கூறினர். பெயரளவில் மாற்றுத் திறனாளிகள் துறையை தன்வசம் வைத்துள்ள இந்த விடியா அரசின் முதலமைச்சர், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் மாற்றுத் திறனாளிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட மனமில்லாமல், அவர்களை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்களது குறைந்தபட்ச கோரிக்கையான, தமிழகத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகையை, அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று, குறைந்தபட்சம் 3,000 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான்.

இக்கோரிக்கையினை எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும், பதவியேற்று 7 மாதங்கள் ஆனபொழுதும், இன்னும் இதை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டினர். இவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராத இந்த திமுக அரசு, அவர்களை அடக்கி ஒடுக்கிவிடும் எண்ணத்துடன், அமைதியான வழியில் மாநிலம் முழுவதும் போராடிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்திருப்பது, ஆளும் அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்றும்; அவர்களை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த விடியா அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

click me!